ADDED : அக் 04, 2024 12:08 AM
ஹாவேரி : ஹாவேரி, ஹிரேகெரூரின் சிக்கோர் கிராமத்தில் வசித்தவர் சாதிக் மத்துார், 30. இவர் சில ஆண்டுக்கு முன் சல்மா, 26, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சல்மாவுக்கு, அதே கிராமத்தை சேர்ந்த ஜாபர், 28, என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரும் நெருக்கமாக இருப்பதை நேரில் பார்த்த சாதிக் கோபமடைந்து, பல முறை கண்டித்தார். ஆனால் அவர்கள் திருந்தவில்லை.
'உங்கள் இருவரின் பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வேன்' என, சாதிக் மிரட்டினார்.
அவர் தற்கொலை செய்து கொண்டால், இருவரும் சிறைக்கு செல்ல நேரிடும் என, அஞ்சிய சல்மா, தன் கள்ளக்காதலருடன் கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
செப்.,25ம் தேதி நள்ளிரவு, சாதிக் உறக்கத்தில் இருந்தார். அப்போது ஜாபரும், சல்மாவும் கயிற்றால் சாதிக்கின் கழுத்தை நெரித்தனர். முகத்தில் தலையணை வைத்து அழுத்தினர். அதன்பின் அரிவாளால் அவரது தலையில் தாக்கி கொலை செய்தனர்.
காலையில், தன் கணவர் குளியல் அறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக அக்கம், பக்கத்தினர், உறவினர்களிடம் சல்மா கதை கட்டினார். இறுதி சடங்குகளும் நடத்தினர்.
ஆனால் சாதிக் இறப்பில், அவரது சகோதரர் ஹுசேனிமியாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஹம்சபாவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
விசாரணையில் சாதிக்கின் மனைவிக்கும், ஜாபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரிந்தது. சல்மாவையும் ஜாபரையும் தீவிரமாக விசாரித்த போது, சாதிக்கை கொன்றதை ஒப்புக்கொண்டனர். இருவரையும் போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.