UPDATED : ஆக 17, 2025 04:18 AM
ADDED : ஆக 17, 2025 04:17 AM

புதுடில்லி: 'ஓ ட்டு திருட்டால், பா.ஜ., வெற்றி பெற்றது' என, காங்கிரசின் ராகுல் புகார் எழுப்பியுள்ளதோடு, இது தொடர்பாக போராட்டமும் நடத்தி வருகிறார்; இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதனிடையே, 'காங்கிரஸ் தான் ஓட்டு திருட்டு நடத்தியுள்ளது' என, பா.ஜ., எதிர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. கர்நாடக அமைச்சராக இருந்த ராஜண்ணா, 'இந்த ஓட்டு திருட்டு விவகாரத்தில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஈடுபட்டது' என கூறியுள்ளார்; இதனால் இவரது அமைச்சர் பதவி பறிபோனது.
தேர்தல் ஆணையம், இண்டி கூட்டணி தலைவர்களை நேரடியாக சந்திக்க அழைப்பு விடுத்தது. அதிக பட்சமாக, 30 பேர் அடங்கிய குழு வர அனுமதி அளித்தது ஆணையம்.
'சந்திக்க வருகிறோம்' என, காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் தேர்தல் ஆணையத்திற்கு பதில் அனுப்பினார்; விரைவில் யார் யார் பங்கேற்பர் என்ற பட்டியலை அனுப்புவதாகவும் கூறினார் ஜெய்ராம் ரமேஷ்.
ஆனால், கடைசி வரை அந்த பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படவே இல்லை; இதனால் தேர்தல் ஆணையம் -- -இண்டி கூட்டணி கூட்டம் நடைபெறவே இல்லை.