வக்ப் சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த தடையில்லை!
வக்ப் சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த தடையில்லை!
ADDED : செப் 16, 2025 01:15 AM
நாடு முழுதும் வக்ப் சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம், சில பிரிவுகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்து, வக்ப் சட்டத் திருத்தம் தொடர்பான வழக்குகளை முடித்து வைத்தது.
நாடு முழுதும் முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் வழங்கும் நிலங்கள், சொத்துக்கள் ஆகியவற்றை வக்ப் வாரியம் நிர்வகித்து வருகிறது.
வக்ப் சொத்துக்களின் நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கில், 1995ல் கொண்டு வரப்பட்ட வக்ப் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து பார்லி.,யில் மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இந்த திருத்த மசோதா பார்லி.,யின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பின் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமானது.
இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தி.மு.க., சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஏ.ஐ.எம்.ஐ.எம்., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இவ்வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வக்ப் சட்டத் திருத்தத்திற்கு முழுமையாக தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை' என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அதே நேரம் இந்த சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.
அதன் விபரம்:
வக்ப் வாரியத்துக்கு சொத்துக்களை தானமாக வழங்க முன்வரும் நபர், ஐந்து ஆண்டுகள் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற சட்டப் பிரிவை நிறுத்தி வைக்கிறோம். மாநில அரசுகளும் இதற்கான விதிகளை உருவாக்கும் வரை இந்த சட்டப்பிரிவு நிறுத்தப்படுகிறது.
வக்ப் வாரிய சொத்து விசாரணை ஷரத்துகளில் ஒரு பிரிவை மட்டும் நிறுத்தி வைக்கிறோம். அதாவது, வக்ப் வாரிய சொத்துக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியின் அறிக்கையை அடிப்படையாக வைத்து எந்தவொரு சொத்து ஆவணங்களையும் திருத்தக் கூடாது.
ஆக்கிரமிப்பு புகாருக்கு உள்ளாகும் வக்ப் சொத்து மீது, தீர்ப்பாயம் முடிவெடுக்கும் வரை, அதன் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
அதே சமயம் அந்த சொத்து தொடர்பாக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்கும் வகையில் கலெக்டருக்கு அத்தகைய அதிகாரங்களை வழங்குவதற்கு தடை விதிக்கிறோம்.
மத்திய வக்ப் கவுன்சிலின் 22 உறுப்பினர்களில் அதிகபட்சமாக நான்கு பேர் வரை முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்கலாம்.
11 பேர் கொண்ட மாநில வக்ப் வாரியங்களில் அதிகபட்சமாக மூன்று பேர் வரை முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினர்களாக நியமிக்கலாம். வக்ப் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக முடிந்தவரை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரை நியமிக்கலாம் என கருதுகிறோம்.
இந்த உத்தரவுகள் அனைத்தும் இடைக்காலமாக பிறப்பிக்கப்படுகிறது. மேலும், இந்த உத்தரவு திருத்தப்பட்ட ஷரத்துகளின் அரசியலமைப்பு தன்மையை நிச்சயம் பாதிக்காது.
இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -

