தேமுதிகவை இழுக்கும் பணியில் திருமா; அதிமுகவை 'அலெர்ட்' செய்த பாஜ மேலிடம்
தேமுதிகவை இழுக்கும் பணியில் திருமா; அதிமுகவை 'அலெர்ட்' செய்த பாஜ மேலிடம்
UPDATED : ஜன 28, 2026 09:24 AM
ADDED : ஜன 28, 2026 08:12 AM

சென்னை: தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் அதிமுக - பாஜ ஈடுபட்டுள்ளன. இதற்கான ஆலோசனைகளை அதிமுக பொதுச்செயலர் பழனிசாமிக்கு பாஜ தெரிவித்து வருகிறது. தேமுதிக தலைமையுடன் பழனிசாமி ஏற்கனவே பேச்சு நடத்தினார்.
தேமுதிக தரப்பில் வைக்கப்பட்ட இரட்டை இலக்க தொகுதிகள், ராஜ்யசபா எம்பி ஆகிய கோரிக்கைகளை அதிமுக ஏற்றாலும், 'மத்திய அமைச்சர் பதவி' கோரிக்கையை பாஜ பக்கம் திருப்பிவிட்டது. எனவே, தேமுதிக தலைமையை தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பேசினார். அப்போது, விஜயபிரபாகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி தருமாறு கேட்டுள்ளனர். 'உங்களின் கோரிக்கை தேர்தலுக்கு பின் நிறைவேற்றப்படும்' என, பியுஷ் கோயல் உறுதி அளித்தும் தேமுதிக ஏற்கவில்லை.
இதனால், மதுராந்தகத்தில் கடந்த 23ம் தேதி நடந்த பிரதமர் மோடி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கவில்லை. இதற்கிடையே, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்ததால், தேஜ கூட்டணி பலமானதைத் தொடர்ந்து, தே.மு.தி.க.,வை தங்கள் கூட்டணியில் சேர்க்க தி.மு.க., மேலிடம் தீவிரம் காட்டியது.
அமைச்சர் வேலு வாயிலாக நேரடியாக பேச்சு நடத்திய நிலையில், தற்போது கூட்டணி கட்சிகளை தி.மு.க., களம் இறக்கி உள்ளது. அதன்படி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தே.மு.தி.க., தலைமைக்கு நெருக்கமானவர்களிடம், சென்னை அசோக்நகரில் கடந்த 24ம் தேதி இரவு, கூட்டணி தொடர்பாக நீண்ட நேரம் பேச்சு நடத்தி உள்ளார்.
அப்போது, 'தனக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக, பா.ஜ., கூட்டணியில் பழனிசாமி உள்ளார். அது அவருக்கு எதிராக முடியும். அந்த தவறை தே.மு.தி.க., செய்யக்கூடாது. தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தால், தொகுதி குறைவாக இருந்தாலும் நிச்சயம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்' என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பொதுச்செயலர் பிரேமலதாவிடம் தெரிவித்து பதில் அளிப்பதாக, தே.மு.தி.க., நிர்வாகிகள் கூறியுள்ளனர். இந்த தகவல்களை மத்திய உளவுப்பிரிவு போலீசார் வாயிலாக தெரிந்து கொண்ட பா.ஜ., மேலிடம், அ.தி.மு.க., தலைமையிடம் தெரிவித்து உஷார்படுத்தியுள்ளது.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தலைமையும், தே.மு.தி.க., தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் பேசி, கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'கூட்டணிக்கு தே.மு.தி.க.,வை கொண்டு வர, பல வழிகளிலும் முயற்சி நடக்கிறது. விரைவில் முடிவு தெரியும்' என்றனர்.

