கபடியில் அசத்த காத்திருக்கும் திருப்பத்துார் தமிழர் கிரண்
கபடியில் அசத்த காத்திருக்கும் திருப்பத்துார் தமிழர் கிரண்
ADDED : பிப் 21, 2025 05:25 AM

தமிழகத்தில் விளையாடப்படும் பாரம்பரிய போட்டிகளில் ஒன்று கபடி. ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் மட்டும் விளையாடப்பட்டு வந்த கபடி இன்று நகர பகுதிகளிலும் அதிகம் விளையாடப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகளும் கபடியில் ஜொலித்து வருகின்றனர்.
கபடியில் பட்டையை கிளப்பும் தமிழரை பற்றி பார்க்கலாம்.
பெங்களூரின் டாலர்ஸ் காலனியில் வசிப்பவர் சேகர். தமிழகத்தின் திருப்பத்துார் இவரது பூர்வீகம். கடந்த 1980ல் பெங்களூரு வந்து இங்கேயே செட்டில் ஆனார்.
இவருக்கு கபடி விளையாடுவதில் ஆர்வம் அதிகம். இதனால் எச்.எம்.டி., கபடி அணியில் இணைந்தார். இந்த அணியின் முன்னாள் கேப்டன், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக்.
சேகர் கபடி விளையாடுவதை பார்த்து ஈர்ப்பு அடைந்த அவரது மகன் கிரணுக்கும் கபடி வீரர் ஆக வேண்டும் என்று ஆசை வந்தது. தந்தையிடம் பயிற்சி பெற்றார்.
சிறப்பாக விளையாடியதன் மூலம் கர்நாடக ஜூனியர், சப் - ஜூனியர் கபடி அணிகளில் இடம் கிடைத்தது. போட்டிகளில் சிறப்பாக விளையாடி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இதையடுத்து, பெங்களூரு பல்கலைக்கழக கபடி அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு தேடி வந்தது. இரண்டு முறை அந்த அணிக்காக விளையாடி ஒருமுறை கேப்டனாக அணியை வழி நடத்தி உள்ளார்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம், கட்டாக்கில் 71வது தேசிய சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று துவங்கின. இதில் கர்நாடக கபடி அணியும் இடம்பிடித்துள்ளது. இந்த அணியில் பெங்களூரில் இருந்து ஒரே ஒரு வீரராக கிரண் மட்டும் தேர்வாகி உள்ளார்.
'அங்கு நடக்கும் போட்டிகளில், உன்னுடைய ஆட்டத்தின் மூலம் எதிரணியினரை மிரள விட வேண்டும்' என்று அவரது குடும்பத்தினர், நண்பர்கள் வாழ்த்தி அனுப்பி உள்ளனர். நாமும் அவரை வாழ்த்தலாமே. தொடர்புக்கு, கிரண் தந்தை சேகர்: 94488 28062.
- நமது நிருபர்-