ADDED : செப் 06, 2025 11:27 PM
ஹோஷியார்பூர்:பஞ்சாப் மாநிலத்தில், ஆம்புலன்ஸ் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் காங்க்ராவில் இருந்து ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ், பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் - -தர்மசாலா தேசிய நெடுஞ்சாலையில்,
மனுக்வால் அருகே நேற்று காலை, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
ஆம்புலன்ஸில் இருந்த ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பதியல் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவ் சோனி,50, கங்காத் கிராமத்தைச் சேர்ந்த ஓம்கார் சந்த்,70, மற்றும் நுார்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் கபூர்,45, ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட நுார்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரேணு கபூர்,49, மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகிய இருவரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மூவர் உடலும் ஹோஷியார்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கனமழை காரணமாக சாலையோரத்தில் மண் நெகிழ்ந்து இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, ஹோஷியார்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.