வீடுகள் அருகே அதிக மண் தோண்டியதால் விழுந்ததில் 2 சிறுமியர் உள்ளிட்ட மூவர் பலி
வீடுகள் அருகே அதிக மண் தோண்டியதால் விழுந்ததில் 2 சிறுமியர் உள்ளிட்ட மூவர் பலி
ADDED : ஜூன் 17, 2025 08:33 PM
மதுரா:குடியிருப்புகள் அருகே அதிக அளவில் மண்ணை தோண்டி எடுத்ததால், ஆறு வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் இரண்டு சிறுமியர் உட்பட மூன்று பேர் இறந்தனர். அந்த பகுதியில் மண் தோண்டி, விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். அவரை பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளனர்.
உ.பி,.யின் மதுரா நகர் அருகே உள்ளது காச்சி சடக் என்ற இடம். இந்த பகுதியின் அருகே உள்ளது மாயா டீலா என்ற குடியிருப்பு வளாகம். இந்த பகுதியில் பல குடும்பங்கள், வீடுகள் கட்டி வசித்து வந்தன. சுனில் குப்தா என்ற நபர், அந்த குடியிருப்புகள் அருகே மனை விற்று வந்தார்.
அந்த மனைகளை சமப்படுத்துவதற்காக, நிறைய மண்ணை, அந்த பகுதியில் தோண்டி எடுத்தார். இதனால், அடித்தளம் பலவீனமாகி, ஐந்து குடியிருப்புகள் விழுந்தன. இதில், வீடுகள் மண்ணில் புதைந்ததால், இரண்டு சிறுமியர் உள்ளிட்ட மூன்று பேர் இறந்தனர்.
பிருந்தாவன் அருகே உள்ள கவுதம்பாடா என்ற பகுதியை சேர்ந்த யசோதா, 6, மற்றும் காவ்யா, 3, ஆகிய இரு சிறுமியர், தங்கள் பாட்டி வீட்டிற்கு வந்திருந்த போது, அவர்கள் வசித்த வீடுகள் இடிந்து விழுந்து, இருவரும் இறந்து விட்டனர். இந்த விபத்தில் தோடாராம், 38, என்ற நபரும் இடிபாடுகளில் சிக்கி இறந்து விட்டார்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள சுனில்குப்தா என்ற அந்த நபரை தேடி வருகின்றனர். அவர் குறித்த தகவல் கூறுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.