ஜம்மு - காஷ்மீரில் என்கவுன்டர் மூன்று பயங்கரவாதிகள் பலி
ஜம்மு - காஷ்மீரில் என்கவுன்டர் மூன்று பயங்கரவாதிகள் பலி
ADDED : நவ 03, 2024 12:27 AM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கச்வானில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் கமாண்டர் ஒருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்.
இதேபோல் ஜம்மு பகுதியில் டோடா, கிஷ்த்வார், பூஞ்ச், ரஜோரி பகுதி உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினர் நேற்று ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் சுட்டனர்.
இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த இரு வீரர்கள் மற்றும் இரு போலீசார் காயம் அடைந்தனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.