ADDED : பிப் 07, 2024 11:06 PM
சிக்கபல்லாபூர்: 'சிக்கபல்லாபூர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் நான் தான்' என, முன்னாள் அமைச்சர் சுதாகர் கூறி வருகிறார். இதனால் தன் மகனுக்கு சீட் கேட்டுள்ள பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் கோபத்தில் உள்ளார்.
ஆனால், ம.ஜ.த., என்ற கட்சி உள்ளது என்பதை இருவருமே மறந்து பேசி வருவது, அக்கட்சியினரை அதிருப்தி அடைய செய்துள்ளது.
'சிக்கபல்லாபூர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் நான் தான்' என கூறி, முன்னாள் அமைச்சர் சுதாகர் பிரசாரத்தைத் துவக்கி உள்ளார். இதனால் இத்தொகுதியில் தனது மகன் அலோக்கிற்கு, எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் கோபம் அடைந்துள்ளார்.
இருவரும் ம.ஜ.த., தலைவர்களை சந்தித்து, தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இவ்வளவு நடந்த பின்னரும், தொகுதி ம.ஜ.த., தலைவர்கள், தாங்கள் பா.ஜ.,வை ஆதரிப்பதாகவோ, சுதாகர், விஸ்வநாத் தங்களை சந்தித்து அணுகியதாகவோ வெளிப்படையாக கூறவில்லை. லோக்சபா தேர்தல் பரபரப்பு அதிகரித்து வந்தாலும், ம.ஜ.த., தலைவர்கள் மத்தியில் உற்சாகம் இல்லை.
சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பாகேபள்ளி, ஹொஸ்கேட் தவிர, மீதமுள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில் ம.ஜ.த.,வுக்கு சொந்த ஓட்டு வங்கி உள்ளது. இத்தொகுதியில், வேட்பாளர் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக ம.ஜ.த., உள்ளது குறிப்பிடத்தக்கது.

