கோலாரில் ஹெல்மெட் கட்டாயம் போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை
கோலாரில் ஹெல்மெட் கட்டாயம் போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை
ADDED : மார் 04, 2024 06:52 AM
கோலார்: ''கோலார் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம். தவறினால் அபராதம் விதிக்கப்படும்,'' என்று கோலார் போக்குவரத்து துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாத் எச்சரித்தார்.
கர்நாடகாவில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவு அமலில் உள்ளது.
கோலார் மாவட்டத்தில், இந்த உத்தரவை யாரும் பின்பற்றவில்லை. இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோலார் போக்குவரத்து துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாத் தெரிவித்துள்ளார்.
கோலாரில் வேணுகோபால் சுவாமி கோவில் அருகே, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவர் கூறியதாவது:
இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. ஆனால் வாகனத்தில் செல்வோர், அலட்சியம் காண்பித்து வருகின்றனர்.
பிடிபட்டால் அரசியல் பிரமுகர்களின் செல்வாக்குகளை பயன்படுத்துகின்றனர். இதை தவிர்க்க வேண்டும்.
ஹெல்மெட் உயிர் காக்கும் கவசம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அலட்சியம் செய்வதால் உயிருக்கு உத்தரவாதம் இருக்காது.
இருசக்கர வாகனங்களின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வோரும் கூட, கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
வாகனங்களில் செல்லும் போது, ஹெல்மெட் அணியாதவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் இதே தவறை செய்தால் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

