சர்வதேச கூட்டங்களில் முகத்தை மறைக்க முயன்றேன்: கட்கரி
சர்வதேச கூட்டங்களில் முகத்தை மறைக்க முயன்றேன்: கட்கரி
UPDATED : டிச 12, 2024 10:44 PM
ADDED : டிச 12, 2024 10:25 PM

புதுடில்லி: '' சாலை விபத்துகள் தொடர்பான சர்வதேச கூட்டங்களில் பங்கேற்க செல்லும் போது எல்லாம் முகத்தை மறைக்க முயன்றேன்,'' என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
லோக்சபாவில் சாலை விபத்துகள் குறித்த விவாதத்தில், கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்விக்கு பதிலளித்து நிதின் கட்கரி கூறியதாவது: விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பது என்பதை மறக்க வேண்டும். விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்பதை ஒப்புக் கொள்வதில் தயக்கம் இல்லை. சாலை விபத்துகள் தொடர்பான மாநாடுகளில் பங்கேற்க செல்லும்போது என் முகத்தை மறைக்க முயன்றேன். 2014 ல் முதல்முறை பதவியேற்ற போது சாலை விபத்துகளை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தேன். ஆனால், நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது.
போதுமான உள்கட்டமைப்பு இல்லாதது, சாலை விதிகளை பின்பற்றாதது உள்ளிட்டவை காரணமாக விபத்துகள் நிகழ்கின்றன. இந்தியாவில் மனித நடத்தைகள் மேம்படுவதற்கு பல விஷயங்கள் மாற வேண்டும். சமூகம் மாற வேண்டும். சட்டத்தின் ஆட்சி மதிக்கப்பட வேண்டும்.சாலை ஓரங்களில் லாரிகள் முறையற்ற வகையில் நிறுத்தப்படுகின்றன. பல லாரி டிரைவர்கள் விதிகளை மதிப்பது கிடையாது.
பஸ்கள் கட்டுமானத்தில் சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். அவசர காலங்களில் ஜன்னலை உடைத்து வெளியேற சுத்தியல் வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் எனது குடும்பமும் விபத்தில் சிக்கியது. ஆனால், கடவுளின் கருணையால் நானும் எனது குடும்பமும் தப்பினோம். இந்த அனுபவம் தான் சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்ற உறுதியை ஏற்படுத்தியது.
நிடி ஆயோக் அறிக்கையில் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் 30 சதவீதம் போதிய மருத்துவ சிகிச்சை இல்லாததால் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் ரொக்கமில்லா சிகிச்சை முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.
எங்கு அதிகம்
இந்தியாவில் ஆண்டுதோறும் விபத்துகளில் சுமார் 1.78 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள்.
உ.பி.,யில் 23 ஆயிரம் பேரும்
தமிழகத்தில் 18 ஆயிரம் பேரும்,
மஹாராஷ்டிராவில் 15 ஆயிரம் பேரும்,
ம.பி.,யில் 13 ஆயிரம் பேரும் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர்.
நகரங்கள் அடிப்படையில்
டில்லியில் 1,400 பேரும்
பெங்களூருவில் 915 பேரும்
ஜெய்ப்பூரில் 850 பேரும் ஆண்டு தோறும் உயிரிழக்கின்றனர்.