ADDED : மே 14, 2025 06:31 PM
புதுடில்லி:பீடி கொடுக்க மறுத்தவரை, அடித்துக் கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு டில்லி ரகுவீர் நகரில் வசித்தவர் கன்ஹையா. சம்பவத்தன்று இரவு, தெரு ஓரத்தில் நின்று, பீடி புகைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சமையல்காரர் வினோத், 27, ஆட்ட்டோ டிரைவர் அர்ஜுன்,39, ஆகிய இருவரும், கன்ஹையாவிடம் பீடி கேட்டனர். அவர் தர மறுத்தார்.
ஆத்திரம் அடைந்த இருவரும், கடாயை வைத்து கன்ஹையா தலையில் சரமாரியாகத் தாக்கினர்.
தலையில் ரத்தம் வடிந்த நிலையைல், குரு கோவிந்த் சிங் அரசு மருத்துவமனைக்கு சென்ற கன்ஹையாவுக்கு முதலுதவி செய்து அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்த கன்ஹையாவுக்கு அடுத்த சில மணி நேரத்தில் உடல்நிலை மோசமடைந்தது. குடும்பத்தினர் அதே மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன் தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி கன்ஹையா மரணம் அடைந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து, வினோத் மற்றும் அர்ஜுன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.