ADDED : டிச 25, 2024 12:52 AM
லக்னோ, உத்தர பிரதேசத்தில், வங்கி கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளில் இருவர், நேற்று நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள சின்ஹாத் என்ற இடத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இதற்கு அருகே காலி மனை உள்ளது. கடந்த, 22ம் தேதி அந்த மனை உள்ள பகுதி வழியாக வங்கியின் சுவரை தோண்டி, உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், 40 லாக்கர்களில் இருந்த பணம் நகைகளை திருடிச் சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பீஹாரை சேர்ந்த அரவிந்த் குமார், பல்ராம், கைலாஷ் என்ற மூவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களின் கூட்டாளிகளான சோபிந்த் குமார், சன்னி தயாள், மிதுன் குமார், விபின் குமார் ஆகியோரை தேடி வந்தனர்.
இந்நிலையில், தப்பிச் சென்ற குற்றவாளிகள் சின்ஹாத் பகுதியில் உள்ள லாவலை என்ற கிராமத்தில் சுற்றித் திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார், இரண்டு வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்த கொள்ளையன் சோபிந்த் குமார், போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், சோபிந்த் குமார் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு வாகனம் தப்பி சென்றது. இதற்கிடையே, உ.பி.,யின் காஜிபூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் பீஹார் எல்லை நோக்கி தப்பி செல்ல முயன்றனர்.
போலீசார் துரத்தி சென்றனர். குதுப்புர் என்ற இடத்தில் போலீசார் அவர்களை மடக்கினர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் உயிரிழந்தார். அவர், வங்கி கொள்ளையில் ஈடுபட்ட சன்னி தயாள் என்பது தெரியவந்தது. மற்றொரு குற்றவாளி தப்பினார்.
இவர்களிடம் இருந்து துப்பாக்கி, 35,500 ரூபாய் பணம், கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளி ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டன.

