ஓமனில் வெள்ளத்தில் சிக்கிய கார்; கேரளாவை சேர்ந்த இருவர் பலி
ஓமனில் வெள்ளத்தில் சிக்கிய கார்; கேரளாவை சேர்ந்த இருவர் பலி
ADDED : மார் 22, 2026 10:34 PM

பாலக்காடு: ஓமன் நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, கேரளாவைச் சேர்ந்த இருவர் உயிர் இழந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு திருத்தாலாவைச் சேர்ந்தவர் ஷம்லா 32. இவர் ஓமனின், 'இன்காஸ்' அமைப்பின் தலைவரான லுபிஷாத்தின் மனைவி. அதேபோல் திருத்தாலா பகுதியைச் சேர்ந்தவர் யூசுப், 38. இவர் ஓமனில் வியாபாரம் செய்து வந்தார். யூசுப் மற்றும் லுபிஷாத்தின் குடும்பத்தினர், ஒரே காரில் ரம்ஜான் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக, ஓமன் நாட்டிலுள்ள பர்கா சுற்றுலா தலத்திற்கு சென்று விட்டு திரும்பியுள்ளனர்.
அப்போது அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இவர்களது கார் சிக்கியது.இதில், ஷம்லா மற்றும் யூசுப் பலியாகினர். ஷம்லாவின் தாயார் ரம்லா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணி நடந்து வருகிறது. காரில் மொத்தம் ஒன்பது பேர் பயணம் செய்தனர். அவர்களில் நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

