ADDED : ஜன 15, 2026 02:01 AM

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், 'நிபா' வைரஸ் பாதிப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இரு நர்ஸ்கள், புர்த்வான் மருத்துவமனையில் இருந்து கொல்கட்டாவில் உள்ள பெலியகட்டா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வவ்வால் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவுகிறது. மேற்கு வங்கத்தில், இரு நர்ஸ்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒருவர், புர்பா வர்த்தமான் மாவட்டத்தில் உள்ள கட்வாவை சேர்ந்தவர். சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்று வந்த இவர், நிபா வைரசால் பாதிப்படைந்ததை அடுத்து, புர்த்வான் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இவரது நிலைமை மோசமடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம் இரவு கொல்கட்டாவில் உள்ள பெலியகட்டா ஐ.டி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதேபோல், நிபா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள மற்றொரு நர்ஸ், வங்கதேச எல்லையான மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் குக்ரகாச்சி பகுதிக்கு சமீபத்தில் சென்ற போது, நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இவரும், கொல்கட்டா பெலியகட்டா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பாதிக்கப்பட்ட இரு நர்ஸ்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இருவரும், இன்னும் கோமா நிலையில் இருப்பதால், அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

