UPDATED : மே 10, 2026 05:27 AM
ADDED : மே 09, 2026 11:46 PM

புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி,
அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க., கூட்டணியில்
இருந்த காங்., உறவை முறித்து, விஜய் கட்சி பக்கம் தாவியது. இதற்கு காரணமான
இரண்டு, 'பிசி'க்கள் குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்களில் கிண்டலாக
பேசப்படுகிறது.
'தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க
வேண்டும்' என, பெரும்பாலான தமிழக காங்., தலைவர்கள் விரும்பினர். ஆனால்,
தி.மு.க.,வுடன் கூட்டணி தொடர செல்வப்பெருந்தகை விரும்பினார்.
இதனால், 'பிசி' என அழைக்கப்படும், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின்
உதவியை நாடினார். சோனியாவுடன் ஆலோசனை நடத்திய சிதம்பரம், பின், ஸ்டாலினை
சந்தித்து தி.மு.க., - - காங்., கூட்டணியை உறுதிபடுத்தினார். இது
ராகுலுக்கு பிடிக்கவில்லை. இதனால், தமிழகத்தில் ஸ்டாலினுடன் இணைந்து
பிரசாரம் செய்ய மறுத்து விட்டார்.
தேர்தல் முடிந்து, த.வெ.க.,
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போது, இன்னொரு, 'பிசி' களம் இறங்கினார்.
அவர், காங்கிரசின் பிரவீன் சக்கரவர்த்தி. இவர், ராகுலுக்கு நெருக்கமானவர்.
'விஜயுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, தலைமையை வற்புறுத்தி வந்தவர்.
தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே, இவர் ராகுலுடன் பேசி, 'த.வெ.க.,விற்கு
காங்கிரசின் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளிப்பர்' என, உடனடியாக
முடிவெடுக்க வைத்தார். இதையடுத்து தி.மு.க., - - காங்., கூட்டணி உடைந்தது.
விஜயுடன் நெருக்கமாக காணப்பட்டார் பிரவீன் சக்கரவர்த்தி.
த.வெ.க.,
ஆதரவுடன், ராஜ்யசபா எம்.பி.,யாக முயற்சிக்கிறார் எனவும் பேசப்படுகிறது.
இனி, காங்,, மூத்த தலைவரான சிதம்பரத்தின் நிலை என்னவாகும் என, கட்சிக்குள்
விவாதம் நடக்கிறது. தற்போது, ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள சிதம்பரத்தின்
பதவிக்காலம், 2028 ஜூனில் முடிவடைகிறது. இத்துடன் 'இவரின் அரசியல்
வாழ்க்கையும் முடிவிற்கு வரும்' என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.
