ADDED : ஜன 08, 2024 11:43 PM

தட்சிண கன்னடா,: குக்கே சுப்பிரமண்யா கோவிலில் பயணியரை இறக்கிவிட்டு வந்த டாடா சுமோ, கடை மீது மரம் சாய்ந்து விழுந்ததில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், சுப்பிரமண்யா கோவிலுக்கு, சுற்றுலா பயணியரை இறக்கிவிட்டு, டாடா சுமோ திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, சாலை ஓரத்தில் இருந்த பெரிய மரம் ஒன்று சாய்ந்தது. இதில் டாடா சுமோவும் அருகில் இருந்த கடையும் சேதமடைந்தன.
காரில் இருந்து சேகர் உட்பட இருவர் படுகாயம் அடைந்தனர். கடையில் இருந்த சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரி பிரமோத் சுப்பிரமணியா கூறியதாவது:
இதுபோன்று காய்ந்த மரங்களை அகற்ற, வனத்துறையிடம் பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் மரங்களை அகற்ற அனுமதி கிடைக்கவில்லை.
சாலை ஓரத்தில் இருந்து ஒன்பது மீட்டர் துாரத்தில் மரங்கள் இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இந்த பகுதியில் சாலையை ஒட்டியே மரங்கள் உள்ளன. காய்ந்து போன மரங்களை வனத் துறையினர் அகற்றாவிட்டால், இதுபோன்ற சம்பவங்கள் தொடரும்.
இவ்வாறு அவர்கூறினார்.
சுப்பிரமணிய மண்டல வனத்துறை அதிகாரி விமலர் கூறியதாவது:
பொதுப்பணி துறையினர் அகற்ற அறிவுறுத்தியிருந்த பெரும்பாலான மரங்கள் அகற்றப்பட்டு விட்டன. சாலை அகலப்படுத்திய பின், சில மரங்கள் சாலையோரம் இருப்பது போன்று காணப்படுகிறது.
பல இடங்களில் ஆபத்தமான மரங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்தந்த பகுதி பஞ்சாயத்துகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற மரங்களை அகற்ற கடிதம் வழங்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் அனுமதி அளித்தால், மரங்கள் அகற்றப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.