உத்தரகண்டில் யு.சி.சி., தாக்கம்: பதிவானது முதல் 'லிவ் இன்'
உத்தரகண்டில் யு.சி.சி., தாக்கம்: பதிவானது முதல் 'லிவ் இன்'
UPDATED : பிப் 06, 2025 07:36 AM
ADDED : பிப் 06, 2025 12:44 AM

டேராடூன்: உத்தரகண்டில், யு.சி.சி., எனப்படும், பொது சிவில் சட்டம் அமலாகி, 10 நாட்கள் ஆன நிலையில், 'லிவ் இன்' உறவுமுறை தொடர்பான முதல் பதிவு நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், பொது சிவில் சட்டம் கடந்த மாதம், 27ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையையும் உத்தரகண்ட் பெற்றது.
இந்த சட்டத்தின்படி, திருமணம் செய்யாமல் கணவன் - மனைவியாக லிவ் - இன் உறவு முறையில் வாழ்பவர்களும் அதை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு உறவுமுறையில் இருப்பவர்கள் 21 வயதுக்குக் கீழ் இருந்தால், பெற்றோரின் அனுமதி அவசியம் என்றும் சட்டம் சொல்கிறது.
லிவ் - இன் உறவுமுறையில் இருப்பவர்கள், பதிவு செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மீறுபவர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது.
இந்த சூழலில், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, லிவ் - இன் உறவுமுறையில் வாழும் ஐந்து ஜோடிகள், அது தொடர்பாக பதிவு செய்ய இணையதளத்தில் விண்ணப்பத்திருந்தனர்.
இதில், ஒரு ஜோடியின் லிவ் - இன் உறவுமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்ட 10 நாட்களில், லிவ் இன் உறவுமுறைக்கான முதல் பதிவு நேற்று மேற்கொள்ளப்பட்டது.
மீதமுள்ள நான்கு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு, லிவ் - இன் உறவுமுறையை பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வரும் சிலர், 'இது தனி மனித உரிமை மீறல். இது தொடர்பான பதிவை ரத்து செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி வருகின்றனர்.
அதேசமயம், தண்டனையை கருத்தில் வைத்து லிவ் இன் முறையை பதிவு செய்ய பலர் முன்வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.