ADDED : ஜூன் 26, 2024 09:05 AM

பெங்களூரு: சனாதன தர்மம் குறித்து விமர்சனம் செய்த தமிழக அமைச்சர் உதயநிதி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். ஒரு லட்சம் ரூபாய் உத்தரவாதம் பெற்று, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
சென்னையில் கடந்தாண்டு செப்டம்பர் 2ம் தேதி, சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இதில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, 'சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும்' என்றார்.
இதற்கு, நாடு முழுதும் ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது வெவ்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வகையில், உதயநிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி, பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பரமேஷ் என்பவர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த பிப்ரவரியில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்திய வெங்கடேஷ், ஆதவன், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி, அதே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, நால்வரையும் நேரில் ஆஜராகும்படி, ஜூன் 3ம் தேதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையில், தங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தடை கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நால்வர் தரப்பிலும், கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது. கிரிமினல் நடவடிக்கை எடுக்க தற்காலிக தடை விதித்து, நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சிவகுமார் முன்னிலையில், அமைச்சர் உதயநிதி நேற்று ஆஜரானார். அவரது சார்பில், வழக்கறிஞர்கள் பாலாஜி சிங், வில்சன், மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் தர்மபால் ஆகியோர் ஆஜராகினர். உதயநிதி சார்பில் நேரில் ஆஜராக நிரந்தர விலக்கு அளிக்கக் கோரியும், ஜாமின் கோரியும் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வில்சன் வாதாடுகையில், ''உதயநிதி நேரில் ஆஜராகி உள்ளார். அவர் மீது நாட்டில் பல இடங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர், ஒரு மாநிலத்தின் அமைச்சர். எனவே, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விலக்கு அளித்துள்ளது,'' என்றார்.
நீதிபதி சிவகுமார் கூறுகையில், ''விசாரணை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதற்குள் உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்ததற்கான உத்தரவு நகலை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், நிரந்தர விலக்கு அளிப்பது குறித்து பார்க்கலாம். ஒரு லட்சம் ரூபாய் உத்தரவாதம் செலுத்தி, ஜாமின் பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்றார்.
இதன்படி, 1 லட்சம் ரூபாய் உத்தரவாதம் செலுத்தி, உதயநிதி ஜாமின் பெற்றார். பின், அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

