மத்திய பட்ஜெட் கூட்டம்: ஒத்துழைக்குமா எதிர்கட்சிகள் ?
மத்திய பட்ஜெட் கூட்டம்: ஒத்துழைக்குமா எதிர்கட்சிகள் ?
UPDATED : ஜூலை 21, 2024 03:31 PM
ADDED : ஜூலை 21, 2024 10:24 AM

புதுடில்லி: பார்லி., பட்ஜெட் கூட்டம் நாளை (ஜூலை-22) துவங்க உள்ள நிலையில், மத்திய அரசின் சார்பில் இன்று (ஜூலை 21) அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது.
பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் இந்த கூட்டம் பார்லி., கூட்ட அரங்கில் நடந்தது. முதன் முதலாக எதிர்கட்சி தலைவராக ராகுல் கலந்து கொள்ளும் கூட்டம் இதுவாகும். சில காரணங்களுக்காக திரிணமுல் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைக்குமாறு அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது குறித்து பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: பார்லிமென்ட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொறுப்பு தான். ஜனநாயகத்தை வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். பார்லிமென்டில் அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க தயாராக உள்ளோம்.
பட்ஜெட்
சிறப்பு அமர்வில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசும் போது, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் குறுக்கிடப்பட்டது. இது பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. பிரதமர் பேசும்போது, மக்களும், நாடும் அதைக் கேட்க வேண்டும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என நம்புகிறோம். நல்ல பட்ஜெட்டை கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
என்ன செய்யலாம்?
பார்லி., பட்ஜெட் கூட்டம் துவங்கவுள்ள நிலையில் ஆளும் அரசுக்கு எந்த வகையில் நெருக்கடி கொடுக்கலாம் என்பது குறித்து காங்., தலைமையிலான எதிர்கட்சிகள் நாளை (ஜூலை-22) ஆலோசனை நடத்துகின்றன. காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் சோனியா இல்லத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து
காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே 82 வது பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளர். கார்கே நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.