பா.ஜ., வேட்பாளருக்காக டெபாசிட் தொகை கட்டிய மாணவர்கள்: உக்ரைனில் இருந்து திரும்ப உதவியதற்கு நன்றிக்கடன்
பா.ஜ., வேட்பாளருக்காக டெபாசிட் தொகை கட்டிய மாணவர்கள்: உக்ரைனில் இருந்து திரும்ப உதவியதற்கு நன்றிக்கடன்
UPDATED : ஏப் 02, 2024 03:41 PM
ADDED : ஏப் 02, 2024 03:40 PM

திருவனந்தபுரம்: மத்திய இணையமைச்சரான வி.முரளீதரனின் வேட்புமனு தாக்கலுக்கான டெபாசிட் தொகையை, ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையே அங்கிருந்து தாயகம் திரும்ப உதவியதற்காக மாணவர்களே திரட்டி பணம் செலுத்தியுள்ளனர்.
கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்.,26ல் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (ஏப்.,4) நிறைவடைகிறது. இதில் ஆற்றிங்கல் தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய இணையமைச்சர் வி.முரளீதரன் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், பழவங்காடி கணபதி கோயிலில் வழிபட்ட பின்னர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக மாணவி சாய் ஸ்ருதி கூறுகையில், ''நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு அமைச்சர் முரளீதரன் உதவியதை எங்களால் மறக்கவே முடியாது' என்றார். அவர் ஆற்றிங்கல் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டவுடன், மற்ற மாணவர்கள் சேர்ந்து டெபாசிட் தொகையை திரட்டியுள்ளனர். அதனை மாணவி சாய் ஸ்ருதி, தங்கள் பெற்றோருடன் திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்துக்கு வந்து அளித்துள்ளார். அந்த தொகையை டெபாசிட் செய்து முரளீதரன் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

