நாட்டை ஒருங்கிணைப்பது எனது நோக்கம்: ராகுல் பேச்சு
நாட்டை ஒருங்கிணைப்பது எனது நோக்கம்: ராகுல் பேச்சு
UPDATED : பிப் 04, 2024 05:34 PM
ADDED : பிப் 04, 2024 02:50 PM

ராஞ்சி: நாட்டை ஒருங்கிணைப்பது எனது நோக்கம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் இன்று(பிப்.,04) பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல் மேற்கொண்டார். அவரை தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர். அப்போது ராகுல் பேசியதாவது: மோடியும், பா.ஜ.,வும் இணைந்து இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததை கண்டித்து யாத்திரை நடத்துகிறேன்.
நாட்டை ஒருங்கிணைப்பது எனது நோக்கம். பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்.,வும் நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சி அன்பு கடையை திறந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க பா.ஜ., முயற்சி செய்தது. இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதியாக எதிர்த்து நின்றதால் சதி முறியடிக்கப்பட்டது.
நாட்டில் பொருளாதார அநீதிகள் நடக்கிறது. மக்களின் சொத்துகள் கார்பரேட் முதலாளிகள் வசமாகிறது. பழங்குடியினரின் காடு, நிலம் ஆகியவற்றை காங்கிரஸ் எப்போதும் பாதுகாத்து வருகிறது. நாங்கள் பழங்குடியினருடன் இருக்கிறோம். உங்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பிற்காக 24மணி நேரமும், உழைத்து நீதி கிடைக்க செய்வோம் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
சந்திப்பு
யாத்திரையின் போது, தன்பாத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ராகுல் சந்தித்தார். புகைப்படங்களை எக்ஸ் சமூக வலைதளத்தில் காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், '' நீதிக்கான இந்த மாபெரும் பயணத்தில், அனைவருக்கும் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், அனைவரையும் அழைத்துக்கொண்டு நாம் முன்னேற வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.