கட்சி ஆபீசில் பெண்ணிடம் தகாத நடத்தை; உ.பி., - பா.ஜ., நிர்வாகிக்கு 'நோட்டீஸ்'
கட்சி ஆபீசில் பெண்ணிடம் தகாத நடத்தை; உ.பி., - பா.ஜ., நிர்வாகிக்கு 'நோட்டீஸ்'
ADDED : மே 27, 2025 06:56 AM

லக்னோ : உத்தர பிரதேசத்தில், பா.ஜ., அலுவலகத்தில் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட, அக்கட்சி நிர்வாகியிடம் விளக்கம் கேட்டு, கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கோண்டா மாவட்ட பா.ஜ., தலைவராக இருப்பவர், அமர் கிஷோர் காஷ்யப்.
கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், பெண் ஒருவருடன், அமர் கிஷோர் காஷ்யப் தகாத முறையில் நடந்து கொண்ட தாக, பா.ஜ., தொண்டர் ஒருவர், கட்சி மேலிடத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பான வீடியோவில், கோண்டா மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் படிக்கட்டு அருகே, பெண் ஒருவரை அமர் கிஷோர் காஷ்யப் கட்டி அணைப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
கடந்த ஏப்., 12ம் தேதி பதிவானதாக கூறப்படும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி, அமர் கிஷோர் காஷ்யபுக்கு, உ.பி., - பா.ஜ., பொதுச்செயலர் கோவிந்த் நாராயண் சுக்லா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கத்தை அளிக்கவில்லை என்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அமர் கிஷோர் காஷ்யப் கூறுகையில், ''வீடியோவில் உள்ள பெண், கட்சியின் உறுப்பினர். உடல்நிலை சரியில்லை எனக் கூறி, ஓய்வெடுக்க என்னிடம் இடம் கேட்டதால், அவரை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றேன்.
''படிக்கட்டில் ஏறும் போது அந்தப் பெண்ணுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. அதனால், அவரது கையை பிடித்தேன். என் மீது அவதுாறு பரப்ப சதி நடக்கிறது,'' என்றார்.

