உ.பி., கலவரத்தில் பொது சொத்து சேதம் வன்முறையாளர்களிடம் வசூலிக்க முடிவு
உ.பி., கலவரத்தில் பொது சொத்து சேதம் வன்முறையாளர்களிடம் வசூலிக்க முடிவு
ADDED : நவ 28, 2024 12:38 AM
லக்னோ,உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் சேதமான சொத்துக்களை, வன்முறையாளர்களிடம் இருந்து வசூலிக்கவும், கல் எறிந்தவர்களின் புகைப்படங்களை பொது இடங்களில் போஸ்டராக ஒட்டவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
உ.பி.,யின் சம்பல் மாவட்டத்தில், 16ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இங்கு அதற்கு முன், ஹரிஹர் ஹிந்து கோவில் இருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்து தொல்லியல் ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. முதற்கட்ட ஆய்வு முடிந்த நிலையில், கடந்த 24ல் இரண்டாம் கட்ட ஆய்வை நடத்த தொல்லியல் துறையினர் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசூதி முன் ஏராளமானோர் கூடி, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்போது பணியில் இருந்த பாதுகாப்பு படையினரை நோக்கி, கூட்டத்தினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. வன்முறையாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். கல்வீச்சில் போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர்.
வன்முறை தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் சம்பல் தொகுதி எம்.பி., ஜியாயுர் ரஹ்மான் பார்க் உட்பட 25 தனிநபர்கள் மீதும், அடையாளம் தெரியாத 2,750 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
வன்முறை குறித்து நீதிமன்ற விசாரணை துவங்கப்பட்டுள்ளது. வன்முறையில் பொது சொத்துக்கள் மற்றும் தனிநபர் சொத்துக்களின் சேதம் கணக்கிடப்பட்டு, அவை வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே போல், கல்வீச்சில் ஈடுபட்டவர்களின் படங்களை போஸ்டர் அடித்து பொது இடங்களில் ஒட்டவும் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2020ல் சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறையின் போதும், உத்தர பிரதேச அரசு இதே போன்ற நடவடிக்கையை எடுத்தது.