மும்பை தாக்குதல் பயங்கரவாதியை ஒப்படைத்தது அமெரிக்க அரசு
மும்பை தாக்குதல் பயங்கரவாதியை ஒப்படைத்தது அமெரிக்க அரசு
ADDED : ஏப் 10, 2025 03:54 AM

புதுடில்லி : மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை அமெரிக்காவில் இருந்து தனி விமானம் வாயிலாக நம் அதிகாரிகள் அழைத்து வருகின்றனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் 2008 நவம்பரில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை திட்டமிட்டவர்களில், பாக்., வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லியும் ஒருவர்.
பயங்கரவாதியான இவருக்கும், இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் அமைப்புக்கும் உதவியதாக, பாக்., வம்சாவளியைச் சேர்ந்தவரும், வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த தொழிலதிபருமான தஹாவூர் ராணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில், 2013ல், ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்கா விடம் மத்திய அரசு கோரிக்கை வைத்தது.
இது தொடர்பான மனுவை விசாரித்த அமெரிக்க நீதிமன்றங்கள், அவரை நாடு கடத்த ஒப்புதல் அளித்தன. கடைசி வாய்ப்பாக, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கை ராணா தொடர்ந்தார். அதுவும் சமீபத்தில் நிராகரிக்கப்பட்டது.
தஹாவூர் ராணாவை நாடு கடத்தி அழைத்து வர, சி.பி.ஐ., உள்ளிட்ட விசாரணை அமைப்பின் அதிகாரிகள் சமீபத்தில் அமெரிக்கா சென்றனர்.
இந்நிலையில் நேற்று, நம் அதிகாரிகளிடம் ராணாவை அமெரிக்க அதிகாரிகள் ஒப்படைத்தனர். சட்ட நடைமுறைகள் முடிந்து, அவரை தனி விமானத்தில் நம் அதிகாரிகள் அழைத்து வருகின்றனர். அவர் இன்று வந்து சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.