வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் சிற்பிகள் கல்லுாரி மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி பாராட்டு
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் சிற்பிகள் கல்லுாரி மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி பாராட்டு
ADDED : மார் 01, 2026 02:06 AM

புதுடில்லி: “வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளாக இன்றைய பட்டதாரிகள் திகழ்வர்,”என, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார்.
டில்லி பல்கலையில் நேற்று நடந்த, 102வது பட்டமளிப்பு விழாவில், மாணவ - மாணவியருக்கு பட்டம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கி துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன் பேசியதாவது:
லட்சியம் உயர் கல்வியில் சேரும் பெண்களின் சேர்க்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு, 70 சதவீதம் தங்கப் பதக்கத்தை மாணவியரே பெற்றுள்ளனர்.
மூன்று கல்லூரிகள், இரண்டு வளாகங்கள் மற்றும் எட்டு துறைகளுடன் துவக்கப்பட்ட டில்லி பல்லையில் இன்று 16 வளாகங்கள், 86 துறைகள், 90 கல்லூரிகள், 20 அரங்குகள், விடுதிகள், 30 கல்வி மையங்கள், 34 நூலகங்கள் அமைந்துள்ளன.
இங்கு, ஆறு லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர். டில்லி பல்கலையில் இந்தச் சாதனைக்கு, பேராசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியே காரணம்.
நம் நாட்டின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கும் டில்லி பல்கலை, சர்வதேச தரத்தை எட்டிப் பிடிக்க வேண்டும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச அளவில் முதல் 300 இடங்களுக்குள் டில்லி பல்கலை செல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து, 200 இடங்களுக்குள் ஒன்றாகவும், பின், 100 இடங்களுக்குள் ஒன்றாகவும் தரத்தை உயர்த்திக் கொண்டு, உலக அளவில் முதல் இடத்தை டில்லி பல்கலை அடைய வேண்டும் .
உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் டில்லி பல்கலைக்கு வர விரும்ப வேண்டும். இந்த லட்சியத்தை அடைய பேராசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி, காலநிலை சவால்கள் மற்றும் ஜனநாயத்தின் மீதான அழுத்தங்கள் ஆகியவற்றால் வேகமாக மாறிவரும் உலகில், மாணவர்கள் இன்று பெறும் பட்டம் வெறும் சான்றிதழ் மட்டுமல்ல.
மனிதகுலத்துக்கும் நாட்டுக்குமான அர்ப்பணிப்பு என கருத வேண்டும். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளாக இன்றைய பட்டதாரிகள் திகழ்வர்.
போதை பழக்கம் கற்றுக் கொள்வத்ரை வாழ்நாள் முழுதுக்குமான செயல்முறையாக கருத வேண்டும். போதை பழக்கங்களில் இருந்து மாணவர்கள் விலகி இருக்க வேண்டும்.
தங்கள் சாதனை, குடும்பத்துக்கும், பல்கலைக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் என்பதை மாணவ - மாணவியர் மறந்து விடக் கூடாது. சர்வதேச அளவில் போட்டித்தன்மை வாய்ந்த ஆராய்ச்சி, தொழில் முனைவு மற்றும் புதுமைகளை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டில்லி பல்கலை துணைவேந்தர் யோகேஷ் சிங், பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை வகித்து, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
இளங்கலை, முதுகலை படிப்புகளை முடித்த லட்சத்து 20,408 மாணவ - மாணவியருக்கு பட்டங்கள் மற்றும் 132 பேருக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், 750 பேர் முனைவர் பட்டம் பெற்றனர்.

