துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் முறை: வெற்றிக்கு 392 ஓட்டுகள் தேவை
துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் முறை: வெற்றிக்கு 392 ஓட்டுகள் தேவை
ADDED : ஆக 18, 2025 07:20 PM

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9ம்தேதி நடக்க உள்ள நிலையில், எப்படி நடக்கிறது? எப்படி தேர்வு செய்யப்படுகிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் உடல்நலக்குறைவு காரணமாக ராஜினாமா செய்தார். இதனையடுத்து வரும் செப்டம்பர் 9 ம் தேதி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் தேஜ கூட்டணி சார்பில் மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் எப்படி நடக்கும்?
ராஜ்யசபா, லோக்சபா எம்.பி.,க்கள் ஓட்டளித்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வர். வழக்கமாக ஓட்டுகள் என்பதற்கு பதில், 'எலக்டோரல் கொலேஜ்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். ராஜ்யசபாவில் 6 காலியிடங்களை தவிர்த்து, 12 நியமன எம்.பி.,க்கள் உட்பட, 239 பேர் ஓட்டளிக்க தகுதியுடையவர்கள்.
இதே போல், லோக்சபாவில் ஒரு காலியிடம் தவிர்த்து, 542 பேர் ஓட்டளிக்க தகுதியுடையவர்கள். தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 782 பேர் ஓட்டுகள் உள்ளன. வெற்றிக்கு, 392 ஓட்டுகள் தேவை.
யாருக்கு வெற்றி?
மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு, லோக்சபாவில் 293; ராஜ்யசபாவில் 130 எம்.பி.,க்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணிக்கு, லோக்சபாவில் 234; ராஜ்யசபாவில் 79 எம்.பி.,க்கள் உள்ளனர். இதன்படி, பா.ஜ., கூட்டணிக்கு 423 எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதால், அக்கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.