மணிப்பூரில் மீண்டும் வன்முறை அரசு பங்களா எரிப்பு: 2 பேர் பலி
மணிப்பூரில் மீண்டும் வன்முறை அரசு பங்களா எரிப்பு: 2 பேர் பலி
ADDED : பிப் 16, 2024 10:52 PM

இம்பால் :மணிப்பூரில் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர். எஸ்.பி., அலுவலகம், அரசு பங்களாவை கலவர கும்பல்தீ வைத்து எரித்ததால் பதற்றம் நிலவுகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கும், கூகி பழங்குடியினருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் மோதல் வெடித்தது. இது கலவரமாக மாறி மாநிலம் முழுதும் எதிரொலித்தது.
இந்நிலையில், சுராசந்த்பூரில் வசிக்கும் கூகி இனத்தைச் சேர்ந்த தலைமை காவலர் சிம்லால் பால், ஆயுதம் ஏந்திய குழுவுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகின.
இதையடுத்து, சிம்லால் பால் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதைக் கண்டித்து, 300க்கும் மேற்பட்ட கூகி இனத்தவர் நேற்று முன்தினம் இரவு சுராசந்த்பூர் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர் புகைகுண்டுகள் பயன்படுத்தியதை அடுத்து, கும்பலாக வந்தவர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
எஸ்.பி., அலுவலகம், அதையொட்டியுள்ள கலெக்டர் பங்களாவுக்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்த பொருட்களை தீ வைத்து எரித்தனர்.
வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் உள்ளிட்ட வாகனங்களும் எரிக்கப்பட்டன.
இதையடுத்து, கூட்டத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், சுராசந்த்பூரைச் சேர்ந்த இருவர் பலியாகினர்; 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அண்டை மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்தன.
வன்முறையைத் தொடர்ந்து சுராசந்த்பூர் மாவட்டம் முழுதும் இணைய சேவை, அடுத்த ஐந்து நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.