டென்னிஸ் வீராங்கனை கொலைக்கு காதல் காரணமா? உறவினர்கள் சந்தேகம்
டென்னிஸ் வீராங்கனை கொலைக்கு காதல் காரணமா? உறவினர்கள் சந்தேகம்
ADDED : ஜூலை 12, 2025 01:57 AM

குருகிராம்: குருகிராமில் டென்னிஸ் அகாடமி நடத்தியதன் காரணமாக விளையாட்டு வீராங்கனை சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை, உறவினர்கள் மறுத்துள்ளனர்.
வேறு ஏதோ குடும்ப பிரச்னை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.
ஹரியானா மாநிலம், குருகிராமின் சுஷாந்த் லோக் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா யாதவ், 25; டென்னிஸ் வீராங்கனை. தேசிய அளவிலான போட்டியில் பல பதக்கங்கள் வென்றுள்ளார்.
இவர் சொந்தமாக டென்னிஸ் அகாடமி நடத்தி வந்தார்.
துப்பாக்கிச்சூடு
ராதிகா நேற்று முன்தினம் காலை உணவு சமைத்து கொண்டிருந்த போது, அவரது தந்தை தீபக் உரிமம் பெற்ற துப்பாக்கியால் பின்னால் இருந்து ராதிகாவை ஐந்து முறை சுட்டார்.
சத்தம் கேட்டு வீட்டின் தரை தளத்திலிருந்த தீபக்கின் சகோதரர் மற்றும் அவரது மகன் வந்து பார்த்தனர்.
அப்போது ராதிகா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராதிகா உயிரிழந்தார்.
இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீபக் யாதவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 'மகள் ராதிகா டென்னிஸ் அகாடமி நடத்தி வந்தார். அவரது சம்பளத்தில் நான் உட்கார்ந்து சாப்பிடுவதாக என் கிராமத்தினர் கேவலமாக பேசினர்.
'அதனால், டென்னிஸ் அகாடமியை மூடும்படி பலமுறை கூறினேன்; அவள் கேட்கவில்லை. ஆத்திரத்தில் சுட்டுக் கொன்றேன்' என கூறினார்.
குடும்ப தகராறு
ஆனால், இந்த வாக்கு மூலத்தில் உண்மை இல்லை என அவரின் உறவினர்கள் கூறினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 'தீபக்கிற்கு குருகிராமில் ஏராளமான கட்டடங்கள் உள்ளன.
'அவற்றில் இருந்து மாதத்திற்கு, 15 முதல் 17 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுகிறார். சொகுசு பண்ணை வீடு வேறு உள்ளது. இவரை போய் யார், மகள் சம்பளத்தில் சாப்பிடுகிறார் என கூறப்போகின்றனர்.
'மேலும், மகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அவருக்கு 2 லட்சம் ரூபாயில் டென்னிஸ் ராக்கெட் வாங்கி தந்தார். சமூக வலைதளங்களில் ராதிகா இளைஞர் ஒருவருடன் வீடியோ வெளியிட்டு வந்தார். அதனால் குடும்பத்திற்குள் பிரச்னை நிலவியது' என கூறினர்.

