கழிவுகளை எரிபொருளாக்கும் சுத்திகரிப்பு நிலையம்: கேரள அரசுடன் இணைந்து துவக்கம்
கழிவுகளை எரிபொருளாக்கும் சுத்திகரிப்பு நிலையம்: கேரள அரசுடன் இணைந்து துவக்கம்
ADDED : நவ 08, 2025 01:16 AM

பாலக்காடு: மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் கழிவுப்பொருட்கள் எரிபொருளாக மாற்றும் கழிவு சுத்திகரிப்பு நிலையம் பாலக்காட்டில் செயல்பட துவங்கியுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையார் கோங்காம்பாறை பகுதியில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை எரிபொருளாக மாற்றும், கழிவு சுத்திகரிப்பு நிலையம் செயல்பட துவங்கியுள்ளது.
இதுகுறித்து, கழிவு சுத்திகரிப்பு நிலைய மேலாளர் அதர்ஷ் கூறியதாவது:
கேரளாவின் மிகப்பெரிய மற்றும் மாவட்டத்தின் முதல் கழிவுப்பொருட்களை பதப்படுத்தி எரிபொருளாக மாற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கழிவுகள் பதப்படுத்தப்பட்டு எரிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஆர்.டி.எப்., (Ready use fuel) என்ற எரிபொருளாக மாற்றப்பட்டுகின்றன.
அரசின் கிளீன் கேரளா நிறுவனம் மற்றும் 'நத்திங் இஸ் வேஸ்ட்' என்ற தனியார் நிறுவனமும் ஒருங்கிணைந்து இந்த நிலையத்தை நடத்துகின்றன. மீண்டும் பயன்படுத்த முடியாத கனிமக் கழிவுகள் பதப்படுத்தப்பட்டு, எரிபொருளாக மாற்றப்படும்.
தினமும், 100 டன் கழிவுகள் பதப்படுத்த முடியும். அதே அளவில் ஆர்.டி.எப்., உற்பத்தி செய்யவும் முடியும். சிமென்ட் நிறுவனங்கள் உட்பட உற்பத்தி யூனிட்களில் விலையுயர்ந்த நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பதிலாக இந்த எரிபொருளை பயன்படுத்தலாம்.
கிளீன் கேரளாவின் கீழ் முதல் 'பிளான்ட்' கொச்சியில் செயல்படுகிறது. இங்கு இரண்டாவது 'பிளான்ட்' அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காமல் செயல்படும். இங்கு கழிவுகளைச் சேகரிக்க, வரிசைப்படுத்த, பதப்படுத்த மற்றும் எரிபொருளாக மாற்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உலோக பாகங்கள் மற்றும் கண்ணாடி தவிர அனைத்து கழிவுகளையும் இங்கு பதப்படுத்தலாம். மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து நிறுவனத்தால் சேகரிக்கப்படும் கழிவுகள் தற்போது பதப்படுத்தப்படுகிறது. உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 'பிளான்ட்' விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு, கூறினார்.

