மக்களின் எதிர்காலத்திற்கு நாம் தான் பொறுப்பு : பிரதமர் மோடி
மக்களின் எதிர்காலத்திற்கு நாம் தான் பொறுப்பு : பிரதமர் மோடி
ADDED : ஆக 10, 2024 05:16 PM

வயநாடு : ‛‛ நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்திற்கு நாம் தான் பொறுப்பு'', என பிரதமர் மோடி கூறினார்.
வயநாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலமும், நேரிலும் ஆய்வு செய்த பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பிறகு பிரதமர் மோடி கூறியதாவது: நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த உடன் அனைத்து தகவல்களையும் அறிந்து வந்தேன். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், தன்னார்வலர்கள், டாக்டர்கள் என அனைவரும் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பேரிடர் சாதாரணமானது அல்ல. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கானவர்களின் கனவுகளை தகர்த்துள்ளது. சூழ்நிலையை நேரில் பார்த்தேன். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களையும், காயமடைந்தவர்களையும் சந்தித்தேன்.
பேரிடர் குறித்து அறிந்ததும் முதல்வரை தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தேன். கேரளாவுக்கு மத்திய அரசு தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவி வந்தது. அது தொடரும். இறந்தவர்களின் உறவினர்கள் தனித்துவிடப்பட மாட்டார்கள் என அவர்களுக்கு உறுதி அளிக்கிறேன். இந்த நேரத்தில் நாம் அனைவரும் அவர்களுடன் துணை நிற்கிறோம். கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும். பணப்பற்றாக்குறையால் எந்த பணியும் நிறுத்தப்படாது என உறுதி அளிக்கிறேன். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்திற்கு நாம் தான் பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

