ADDED : மார் 06, 2024 12:48 AM

புதுடில்லிதமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த கருப்பையா காந்தி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
தமிழகத்தில் அமைச்சர்களாக உள்ள பலர் மீது வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் நேர்மையான விசாரணை நடக்கும் வகையில், அவற்றை, சி.பி.ஐ.,க்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அக்.,ல் உத்தரவிட்டிருந்தது.
கடந்த ஜன., 8ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுவை தள்ளுபடி செய்யும்படி, தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி. விஸ்வநாதன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர்கள் மீதான வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி, மனுதாரர் கருப்பையா காந்திக்கு அமர்வு உத்தரவிட்டது.
வழக்கின் விசாரணை, ஏப்., 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

