2014 தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? காங்., மூத்த தலைவர் 'திடுக்' தகவல்
2014 தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? காங்., மூத்த தலைவர் 'திடுக்' தகவல்
ADDED : நவ 28, 2025 06:19 AM

மும்பை: அமெரிக்கா, இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்புகள், 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க சதி செய்ததாக அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யுமான குமார் கேத்கர் குற்றஞ் சாட்டியுள்ளார்.
அரசியலமைப்பு தினத்தையொட்டி நேற்று முன்தினம் மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யுமான குமார் கேத்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாட்டில் 2004ல் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 145 இடங்களையும், அதன்பின் 2009ல் நடந்த தேர்தலில் 206 இடங்களையும் வென்றது.
இந்தப் போக்கு நீடித்திருந்தால், 2014 லோக்சபா தேர்தலில், காங்., 250 இடங்களை வென்று உறுதியாக ஆட்சியைத் தக்க வைத்திருக்கும்.
ஆனால், 2014 லோக்சபா தேர்தலில், 44 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
காங்., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என, அமெரிக்காவின் உளவு அமைப்பு சி.ஐ.ஏ., மற்றும் மேற்காசிய நாடான இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புகள் விரும்பின.
இந்தியாவில் காங்., தலைமையிலான கூட்டணி அரசு தொடர்ந்து ஆட்சி செய்தால், தங்கள் கொள்கைகளை செயல்படுத்த முடியாது என எண்ணி, தங்களுக்கு சாதகமான அரசை ஏற்படுத்த அவை விரும்பின.
இந்தியாவில் பெரும்பான்மை பலம் பொருந்திய அரசு அமைய வேண்டும்; அது, காங்., தலைமையிலான கூட்டணியாக இருக்கக்கூடாது என, இந்த இரண்டு உளவு அமைப்புகளும் திட்டமிட்டன.
இதற்காக விரிவான தரவுகளை தயாரித்து, அதற்கேற்ப திட்டங்களை வகுத்தன. எனவே, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின் முடிவுகள், மக்கள் அளித்த தீர்ப்பல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.

