ஹிந்து அதிகாரிகளுக்கான வாட்ஸ் அப் குரூப்: சர்ச்சையில் சிக்கிய கேரள ஐ.ஏ.எஸ்., அதிகாரி
ஹிந்து அதிகாரிகளுக்கான வாட்ஸ் அப் குரூப்: சர்ச்சையில் சிக்கிய கேரள ஐ.ஏ.எஸ்., அதிகாரி
ADDED : நவ 04, 2024 04:09 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கோபாலகிருஷ்ணன் என்பவரை அட்மினாக கொண்டு வாட்ஸ் அப் செயலியில் ' ஹிந்து ஐஏஎஸ் அதிகாரிகள் ' என்ற குழு துவங்கப்பட்டது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தனது மொபைல் எண் ஹேக் செய்யப்பட்டதாக அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
தீபாவளி அன்று, கேரளாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலரின் வாடஸ் அப் செயலியில், ' ஹிந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ' என்ற பெயர் கொண்ட குழுவில் சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த குழுவில் ஜூனியர்கள் முதல் மூத்த அதிகாரிகள் பலர் இடம்பெற்று இருந்தனர். மதம் மற்றும் ஜாதி ரீதியில் எந்த முடிவு அல்லது செயல்களில் ஈடுபடக்கூடாது என்பது சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான பொதுவான விதி ஆகும்.
அப்படி இருக்கையில் மத ரீதியில் பெயர் கொண்ட 'வாட்ஸ் அப் குரூப்' ல் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. குரூப்பை ஆய்வு செய்த போது அதன் அட்மின் ஆக இருந்தது மாநில தொழில்துறை இயக்குநரான கோபாலகிருஷ்ணன் பெயரை காட்டியது. ஆனால், அடுத்த சில நாட்களில் இந்த குரூப் கலைக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் தனது மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளித்த அவர், தனது நண்பர் ஒருவர் கூறியபிறகே வாட்ஸ் அப் குரூப் துவங்கப்பட்டது தெரியவந்தது. எனது போன் ஹேக் செய்யப்பட்டதுடன், அதன் மூலம் பல வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டன எனக்கூறியுள்ளார்.
மேலும், போன் ஹேக் செய்யப்பட்டது குறித்து ஒவ்வொரு அதிகாரிக்கும் தனித்தனியே செய்தி அனுப்பி வருகிறார்.