மன்மோகன் சிங் நினைவிடம் அமைவது எங்கே? இடங்ளை தேர்வு செய்தது மத்திய அரசு!
மன்மோகன் சிங் நினைவிடம் அமைவது எங்கே? இடங்ளை தேர்வு செய்தது மத்திய அரசு!
UPDATED : ஜன 01, 2025 10:15 PM
ADDED : ஜன 01, 2025 09:43 PM

புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவிடம் அமைக்க மூன்று இடங்களை தேர்வு செய்து, அதில் ஒன்றை பரிந்துரை செய்யும்படி அவரது குடும்பத்திடம் மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 92 வயதில் கடந்த ஆண்டு(2023) டிச., 26ல் காலமானார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த விவகாரத்தில் பா.ஜ., - காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை தெரிவித்தன.
இந்நிலையில், மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைப்பதற்கான இடத்தை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதன்படி ராஜ்காட், ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தல், கிஷன் காட் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மூன்று இடங்களை மன்மோகன் சிங் குடும்பத்திற்கு பரிந்துரைத்துள்ள மத்திய அரசு, அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யும்படி கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் தேர்வு செய்யும் இடத்தில் நினைவிடம் அமைக்க 1 முதல் 1.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். மேற்கண்ட மூன்று இடங்களிலும் மத்திய அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும், ஜவஹர்லாலு நேரு, இந்திரா, ராஜிவ் ஆகியோரின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட் அருகேயும் மன்மோகனுக்கு நினைவிடம் அமைக்கப்படலாம் எனவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
நினைவிடம் அமைப்பது தொடர்பாக புதிய கொள்கையின்படி, தேர்வாகும் இடமானது அறக்கட்டளையிடம் மட்டுமே ஒப்படைக்கப்படும். இதன்படி மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைப்பதற்கு முதலில் அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்கப்பட்டதும், அது நிலம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதன் பிறகு, மத்திய பொதுப்பணித்துறை மற்றும் அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் போடப்படும்.

