UPDATED : பிப் 01, 2026 04:10 PM
ADDED : பிப் 01, 2026 09:56 AM

நமது சிறப்பு நிருபர்
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உருவாக்க குழுவுக்கு தலைவர் நிர்மலா தான். இந்த குழுவில் யார் யார் இடம் பெற்றிருந்தனர், பட்ஜெட் உருவாக்கத்தில் பங்களித்தனர் என்பது ஒரு பெரும் பட்டியல் இருக்கிறது.
* இதில் முதலில் வருபவர் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அனுராதா தாக்கூர். இவர் தான் ஒட்டு மொத்த பட்ஜெட் உருவாக்கத்தின் சூத்திரதாரி.
இவர் கடந்தாண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்தாண்டு தான், பட்ஜெட் தயாரிக்கும் பணியில் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1994ம் ஆண்டு பேட்ச் இமாச்சல் மாநில அதிகாரியான இவர், பொருளாதார விவகாரங்களில் கரைகண்டவர்.
* வருவாய்த்துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா. இவர் தான். வரி தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரி. வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி மற்றும் ஜி.எஸ்.டி., சுங்க வரி போன்ற மறைமுக வரிகளுக்கு பொறுப்பானவர்.
வருவாய்த்துறை செயலாளராக இவருக்கு இது தான் முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
* செலவினத்துறை செயலாளராக வும்லுன்மங் வுல்நம் இருக்கிறார். இவர் தான் அரசின் செலவினங்கள், வரும் ஆண்டுகளுக்கு அரசு திட்டங்களுக்கு ஆகும் செலவுகள் பற்றி கணக்கு கொடுப்பவர்.
* நிதி சேவைத்துறை செயலாளராக இருப்பவர் நாகராஜூ. இவர் பொதுத்துறை வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பென்சன் அமைப்புகளுக்கு பொறுப்பு வகிப்பவர். கடன் வழங்குதல், சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதியை கவனிப்பது இவரது பணி.
* இவர்களை தவிர, பொது சொத்துக்கள் நிர்வாகத்துறை மற்றும் முதலீட்டுத்துறை செயலாளர் அருணிஷ் சாவ்லா, பொது நிறுவனங்கள் துறை செயலாளர் மோசஸ் சலாய் ஆகியோரும் பட்ஜெட் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
* இவர்களுடன் முதன்மை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரனும் இணைந்து பட்ஜெட்டை தயாரிக்க உதவியுள்ளார். சர்வதேச அளவில் இருக்கக்கூடிய நிதி அபாயங்கள், திட்டங்களின் பொருளாதார வளர்ச்சி, துறை வாரியான செயல்பாட்டு கணிப்பு ஆகியவற்றை இவர் பட்ஜெட்டுக்கு வழங்கியுள்ளார்.

