UPDATED : அக் 08, 2024 11:32 PM
ADDED : அக் 08, 2024 08:11 AM
முழு விபரம்

சண்டிகர்: ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பா.ஜ., 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. அங்கு தொடர்ந்து 3வதுமுறையாக ஆட்சி அமைத்து சாதனை படைக்கிறது.
90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில், கடந்த அக்., 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 67.90 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், காங்கிரஸ், பா.ஜ., -ஐ.என்.எல்.டி., -ஜே.ஜே.பி., ஆம் ஆத்மி கட்சிகள் மோதுகின்றன. இந்த கட்சிகள் மட்டுமின்றி, பல தொகுதிகளில் செல்வாக்கு மிகுந்த தனி நபர்கள், சுயேச்சையாகவும் போட்டியிட்டனர்.
முதல்வர் நயாப் சிங் சைனி, பா.ஜ.,வின் அனில் விஜ், காங்கிரசின் வினேஷ் போகத், சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள். தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன
இதில்,
பா.ஜ.,- 48
காங்கிரஸ் -37
இந்திய தேசிய லோக் தளம்-2
சுயேச்சைகள் -3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் அங்கு ஆட்சியை 3வது முறையாக ஆட்சியை பா.ஜ., தக்க வைத்து கொண்டுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தல்!
கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பின்னர் ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது.

