ADDED : நவ 26, 2024 12:59 AM
பெங்களூரு : 'நிகில் தேர்தலில் தோல்வி அடைந்திருக்கலாம், ஆனால், ஒரு மனிதராக தோல்வி அடையவில்லை' என அவரது தாயார் அனிதா குமாரசாமி உருக்கமாக தெரிவித்து உள்ளார்.
சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் ம.ஜ.த.,வின் நிகில் தோல்வி அடைந்தது குறித்து, முதன் முறையாக அவரது தாயார் அனிதா, 'எக்ஸ்' வலைதளத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:
நிகில் தோல்வி அடைந்ததை ஏற்று கொள்கிறேன். தேர்தல் என்றால் வெற்றி, தோல்வி இருக்கும். நிகில் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்க, நான் விரும்பவில்லை. அரசியல் எங்கள் குடும்பத்திற்கு புதிதல்ல. தோல்வியால் மனம் சோர்ந்து போக மாட்டோம்.
என் மகனை பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும். என் கணவர் போன்று ஒரு நல்ல மனிதனாக, எனது பிள்ளை உள்ளார். என் மகன் மூன்றாவது முறையாக தேர்தலில் தோற்றார். ஆனால், மனிதனாக அவர் தோற்கவில்லை.
சென்னப்பட்டணா மக்களின் அன்பும், நம்பிக்கையும் அவருக்கு கிடைத்து உள்ளது. அடுத்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவது நிச்சயம். அதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.
இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

