தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி முடிவெடுத்தது ஏன்?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி முடிவெடுத்தது ஏன்?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி முடிவெடுத்தது ஏன்?


ADDED : மே 07, 2025 08:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 08:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.

அடுத்து நடக்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஜாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தப் போவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பேசி வந்த பா.ஜ., திடீரென தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அறிவித்திருப்பது, பலருக்கும் குறிப்பாக, காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு ஆச்சரியத்தையும், பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்காக நாடகம்


ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பிருந்தே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசி வருகிறார்.

அவரது கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இப்போது, கர்நாடக காங்கிரஸ் அரசும் ஜாதிவாரி 'சர்வே' அடுத்த கட்டம் சென்றுள்ளது.

மத்திய அரசின் முடிவு குறித்து, 'ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது, பீஹார் தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம்' என, தி.மு.க., தெரிவித்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பேசி வந்த பிரதமர் மோடியின் மனநிலையில் திடீர் மாற்றம் ஏன் என, பா.ஜ., தலைவர் ஒருவர் கூறியதாவது:

இந்தியாவை, 55 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ், பலமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியது. ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை.

ஆனால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லை என்றதும், இதை, இப்போது வலியுறுத்துகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை வைத்து, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என, ராகுல் நினைக்கிறார்.

பீஹார், தெலுங்கானாவைத் தொடர்ந்து பல மாநில அரசுகள், ஜாதிவாரி கணக்கெடுப்பை தங்களுக்கேற்ற வகையில் நடத்த திட்டமிடுகின்றன. இது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என, மோடி நினைக்கிறார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பதால், பீஹார், உ.பி.,யில் உள்ள ஜாதி கட்சிகள், பா.ஜ.,வுக்கு எதிராக பிரசாரம் செய்கின்றன. இதனால் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் ஆதரவை, பா.ஜ., இழக்கும் நிலை உருவாகும்.

இந்த ஆண்டு இறுதியில் பீஹாரிலும், 2017 துவக்கத்தில் உ.பி.,யிலும் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் பா.ஜ., தோற்றால், மத்திய பா.ஜ., அரசுக்கு கூட்டணி கட்சிகளால் நெருக்கடி ஏற்படும்.

குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்தும், அதை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு வாயிலாக வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வந்தவர்களை கண்டறிய முடியும் என, மோடி நினைக்கிறார்.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை, பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானதாக, எதிர்க்கட்சிகள் பல மாநிலங்களில் பிரசாரம் செய்கின்றன.

அரசியல் ஆதாயம்


ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், எந்தெந்த சமூகங்களில் ஏழைகள் அதிகம் என்பது தெரியவரும். அப்போது, இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும், தேவைப்பட்டால் மாற்றியமைக்கவும் முடியும்.

பீஹார், ஹரியானா, உ.பி., போன்ற மாநிலங்களில், ஜாதி கட்சிகள் தங்களிடம் பல கோடி பேர் இருப்பதாகக் கூறி, அரசியல் ஆதாயம் அடைந்து வருகின்றன.

அதுபோல, விவசாய சங்கம் என்ற போர்வையிலும் ஜாதி தலைவர்கள்தான், அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் ஜாதிவாரி கணக்கெடுப்பு வாயிலாக ஒரு தீர்வு கிடைக்கும் என, பிரதமர் மோடி நினைக்கிறார்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும், இது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார். இது தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்துடனும், அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us