சபரிமலை தங்கம் திருட்டு வழக்கின் முக்கிய குற்றவாளியை சந்தித்தது ஏன்?: காங்., சோனியாவுக்கு பா.ஜ., கேள்வி
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கின் முக்கிய குற்றவாளியை சந்தித்தது ஏன்?: காங்., சோனியாவுக்கு பா.ஜ., கேள்வி
ADDED : ஜன 26, 2026 06:05 AM

திருவனந்தபுரம்: “சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில், முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தியை சந்தித்தது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா விளக்கம் வேண்டும்,” என கேரள பா.ஜ., மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்திஉள்ளார்.
சர்ச்சை கே ரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், துவாரபாலகர்கள் சிலை, சன்னிதான கதவுகளில் இருந்த தங்க தகடுகள் பழுது நீக்கப்பட்டு, முலாம் பூசுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டபோது, கிலோ கணக்கில் தங்கத்தை உருக்கி திருடியதாக புகார் எழுந்தது.
கேரள உயர் நீதி மன்றத்தின் உத்தரவுப்படி இதை விசாரித்த சிறப்பு புலனாய்வு அமைப்பு, முக்கிய குற்றவாளியான பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரை கைது செய்தது.
மேலும், இந்த திருட்டில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் முன்னாள் உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களும் கைதாகியுள்ளனர்.
தங்கம் திருடு போன விவகாரம் சபரிமலை அய்யப்ப பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை சந்தித்தது போன்ற புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
கேரளாவில் காங்கிரசைச் சேர்ந்த உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது, சோனியாவை உன்னிகிருஷ்ணன் போத்தி சந்தித்த நிலையில், அந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த புகைப்படத்தை திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று காண்பித்து பா.ஜ., மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
இந்த சந்திப்புக்கான காரணம், பின்னணி குறித்து சோனியாவும் காங்கிரஸ் கட்சியும் விரிவாக விளக்க வேண்டும்.
தற்போதைய முதல்வர் பினராயி விஜயனும் போத்தியை சந்தித்துள்ளார். ஆனால், அதை பற்றி அவர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
காங்கிரசுடன் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜமாத் இஸ்லாமி போன்ற மத அமைப்புகளும், உன்னி கிருஷ்ணன் போத்தியை டில்லியில் சந்தித்து இருக்கின்றன.
சந்தேகம் என வே, சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த திருட்டு நடந்து வருகிறது என்பதை ஆரம்பம் முதலே நாங்கள் சொல்லி வருகிறோம்.
அதற்கு ஆதாரமாக, சோனியாவை போத்தி சந்தித்த புகைப்படம் கிடைத்துள்ளது. எனவே, இது குறித்து சோனியா விளக்கம் அளித்தே ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

