ADDED : ஆக 11, 2025 09:11 AM

கூடலூர்: கர்நாடக பந்திப்பூரில் அத்துமீறி செல்போனில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப் பயணியை காட்டு யானை துரத்திச் சென்று தாக்கியது. இதில், சுற்றுலா பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம். இவ்வழியாக மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நேற்று மாலை பந்திப்பூர் மைசூரு சாலையோரம் நின்றிருந்த காட்டு யானையை, சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி பார்த்துக் கொண்டிருந்தனர். பல சுற்றுலா பயணிகள் கீழே இறங்கி, அதனை படம் எடுக்க முயற்சித்து இடையூறு செய்தனர்.
மேலும், வாகனங்கள் சுற்றுலா பயணிகள், அதிக அளவில் கூடியதால் ஆக்ரோஷம் அடைந்த யானை, திடீரென சாலையை கடந்து சென்றது. அப்போது சுற்றுலா பயணிகள் ஒருவர் யானையை பின் தொடர்ந்து ஓடினார். இதனால், ஆக்ரோஷம் அடைந்த யானை, அவரை துரத்தியது. அதனிடமிருந்து தப்பிக்க சாலையை நோக்கி ஓடினார். ஆனால், யானை அவரை துரத்தி சென்று சாலையில், கீழே தள்ளி தாக்கியது. சக சுற்றுலா பயணிகள் சத்தமிட்டு, யானையை விரட்டினர்.
யானை தாக்கியதில் சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தார். அவரை சுற்றுலா பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக, குண்டல்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேலும், தீவிரப்படுத்தி உள்ளனர்.