ADDED : ஜன 29, 2024 11:01 PM

சிக்கமகளூரு: காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
ஹாசனின் பேலுார் வழியாக வந்த காட்டு யானைகள் கூட்டம், மூன்று நாட்களுக்கு முன்பு, மாண்டியாவின் கே.ஆர்., பேட் மாவினகெரே பகுதியில் நடமாடின. மக்களை அச்சுறுத்தின. கூட்டத்தில் 30 முதல் 40 யானைகள் உள்ளன.
இதே யானைகள் கூட்டம், தற்போது சிக்கமகளூரு நகர் அருகில் உள்ள கத்ரிமித்ரி பகுதியில், நேற்று காலையில் காணப்பட்டன. ஒரே நேரத்தில் 30 முதல் 40 யானைகளை கண்டதால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டை விட்டு வெளியே வரவும் அஞ்சுகின்றனர்.
கத்ரிமித்ரி பகுதியில், பள்ளி, கல்லுாரிகள் அதிகம் உள்ளன. யானைகள் நடமாடுவதால், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
யானைகள் விளை நிலங்களில் புகுந்து, பயிர்களை மிதித்து நாசமாக்குகின்றன. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் முகாமிட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். இவற்றை வனத்துக்கு விரட்ட முயற்சிக்கின்றனர்.
மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.