ADDED : டிச 17, 2024 11:33 PM

புதுடில்லி :பிப்ரவரி இறுதிக்குள், பா.ஜ.,வுக்கு புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என, தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., தேசிய தலைவராக, 2020 பிப்ரவரியில், மத்திய அமைச்சர் நட்டா பொறுப்பேற்றார். அக்கட்சி விதிகளின்படி, தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். லோக்சபா தேர்தலை கருதி, நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
கடந்த ஏப்ரலில், குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நட்டா, மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்ததை அடுத்து, மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
தற்போது அவர், சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
இந்நிலையில், பிப்ரவரி இறுதிக்குள் பா.ஜ.,வுக்கு புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
கட்சி விதிகளின்படி, தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை துவங்குவதற்கு முன், மாநில பிரிவுகளில், குறைந்தது பாதி பிரிவுகளில் அமைப்பு தேர்தல்கள் முடிக்கப்பட வேண்டும்.
இதன்படி, மாநில பா.ஜ., தலைவர்களாக உள்ள, 60 சதவீதம் பேரின் பதவிக்காலம் முடிந்து விட்டது.
அவர்களுக்கு பதில், புதியவர்களை தேர்ந்தெடுக்கும் பணியும் நிறைவடைந்து விட்டது. மாநிலங்களின் புதிய தலைவர்கள், ஜனவரியில் பதவியேற்பர். பிப்ரவரி இறுதிக்குள் பா.ஜ., வுக்கு புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என, எதிர்பார்க்கிறோம்.
புதிய தலைவர் மத்திய அமைச்சராக இருக்கலாம் அல்லது கட்சியின் மூத்த தலைவராக இருக்கலாம். இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

