விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்லத் தடையா: டிஜிசிஏ ஆலோசனை
விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்லத் தடையா: டிஜிசிஏ ஆலோசனை
ADDED : அக் 23, 2025 04:49 PM

மும்பை: இண்டிகோ விமானத்தில் திடீரென பவர் பேங்க் தீப்பிடித்து எரிந்த காரணத்தினால், அதனை கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு அல்லது தடை விதிப்பது குறித்து டிஜிசிஏ ஆலோசனை நடத்தி வருகிறது.
கடந்த 19 ம் தேதி டில்லியில் இருந்து திமாப்பூருக்கு கிளம்ப இருந்த விமானத்தில், பயணி ஒருவர் வைத்து இருந்த லித்தியம் பேட்டரியில் ஆன பவர் பேங்க் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக ஊழியர்கள் அதனை அணைத்தனர். யாருக்கும் பாதிப்பு இல்லை.
இதனையடுத்து இது குறித்து டிஜிசிஏ விசாரணை நடத்தியது. விமானத்தில் பவர் பேங்க்குகளை பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் எப்படி கையாள்கின்றனர் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமானங்களில் பவர் பேங்க்குகளை பயன்படுத்துவது அல்லது தடை விதிப்பது அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடமும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் இந்த முடிவு குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.