ADDED : ஜூலை 05, 2026 01:20 AM

லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 2024 லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதி, காங்., கூட்டணி, 43 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று, பா.ஜ.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. சமாஜ்வாதி, 37 தொகுதிகளிலும், காங்., 6 தொகுதிகளிலும் வென்றது. இதனால், பா.ஜ.,விற்கு மத்தியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி தயவில் மீண்டும் பிரதமரானார் மோடி.
கடந்த 2022 உ.பி., சட்டசபை தேர்தலில், தனியாக, 399 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. ஆனால், 2024 லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்ததால் அக்கட்சி பெரும் வெற்றி பெற்றது.
'கடந்த முறை சமாஜ்வாதி அண்ணனாகவும், காங்., தம்பியாகவும் இருந்தது. ஆனால், இந்த முறை நாம் அண்ணனாக செயல்படுவோம்' என, உ.பி., - காங்., மேலிட பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர பால் கவுதம் தெரிவித்துள்ளார். 170 தொகுதிகளில், காங்கிரசின் வெற்றி வாய்ப்பு குறித்து, 'சர்வே' எடுக்க சொல்லியுள்ளார் கவுதம். உ.பி.,யில் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
பா.ஜ.,வை போல, மாயாவதியின் பகுஜன் சமாஜ் தலைவர்களை, தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் காங்., ஈடுபட்டுள்ளது. முஸ்லிம், தாகூர், பிராமணர்கள், தலித் என, அனைத்து சமூகத்தினரையும் கவர, ராஜேந்திர பால் கவுதம் முயன்று வருகிறார்.
கடைசியாக, 1989ல் உ.பி.,யை காங்., ஆண்டது. அதன்பின், தொடர்ந்து தோல்வி தான். தற்போது பிரச்னை என்னவெனில், சமாஜ்வாதி காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை விட்டுக்கொடுக்குமா? அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்வர் கனவில் உள்ளார். இதனால், இரண்டு கட்சிகளுக்கிடையே நிச்சயம் பிரச்னை வரும். இது வெற்றிக்கு உதவும் என, பா.ஜ., கணக்கு போட்டுள்ளது.
