ADDED : ஏப் 04, 2025 10:23 PM
புதுடில்லி:டாக்டர் போல வேடமிட்டு வந்து, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி விடுதி அறைகளில் நகைகளைத் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த 43 வயது பெண், தனியார் மருத்துவமனையில் லேப் - டெக்னீஷியன். இவர், டாக்டர் போல கோட் மற்ரும் ஸ்டெதஸ்கோப் அணிந்து கொண்டும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி விடுதிக்குள் நுழைந்து, திறந்து இருந்த அறைகளில் இருந்து மாணவியர் கழற்றி வைத்திருந்த நகைகளை திருடினார்.
இதுகுறித்து, ஒரு மருத்துவ மாணவ கொடுத்த புகார்படி, ஹவுஸ் காஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மேலும், வளாகத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
விடுதி அறைகளில் இருந்து இரண்டு தங்கச் சங்கிலிகள், ஒரு தங்க வளையல், தங்க மோதிரம், ஒரு ஜோடி தங்கக் காதணிகள், 20,000 ரூபாய் பணம் மற்றும் 700 மலேசிய நாட்டு ரிங்கிட் ஆகியவை திருடு போயிருந்தது.
டாக்டர் போல கோட் அணிந்து சென்ற பெண் குறித்து சந்தேகம் ஏற்பட்டது. மேலும், அவர் பல அறைகளுக்குள் சென்று விட்டு உடனடியாக வெளியே வருவதும் தெரிந்தது.
அந்தப் பெண் வந்த ஸ்கூட்டரின் பதிவு எண்ணை வைத்து, காஜியாபாத் பிரிஜ் விஹாரில் உள்ள அவரது வீட்டில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, திருடப்பட்ட நகைகள், 4,500 ரூபாய் பணம், 522 மலேசிய ரிங்கிட் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல ஏற்கனவே எய்ம்ஸ் விடுதிக்குள் புகுந்து நகை, பணத்தை திருடியதையும் அந்தப் பெண் ஒப்புக் கொண்டார்.

