இரண்டு திருமணங்களை புறக்கணித்து காதலருடன் வாழ்ந்த பெண் எரித்து கொலை * தந்தை மற்றும் சகோதரர் கைது
இரண்டு திருமணங்களை புறக்கணித்து காதலருடன் வாழ்ந்த பெண் எரித்து கொலை * தந்தை மற்றும் சகோதரர் கைது
ADDED : ஜூன் 10, 2025 09:15 PM
புதுடில்லி:டில்லி அருகே உள்ள குரு கிராமில், இரண்டு திருமணம் செய்தும், கணவர்களை பிரிந்து, காதலனுடன் வாழ்ந்த பெண்ணை கொலை செய்த தந்தையும், சகோதரனும் கைது செய்யப்பட்டனர்.
சரஸ்வதி மாலியான் என்ற 23 வயது பெண்ணின் உடல், கருகிய நிலையில் கிடந்தது. அந்த உடலை கைப்பற்றி, விசாரணை நடத்திய போலீசார், அந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து எஸ்.எஸ்.பி., சஞ்சய் குமார் நேற்று கூறியதாவது:
ஆவண கொலை செய்யப்பட்ட சரஸ்வதி மாலியான், 2019 மற்றும் 2022ல் திருமணம் செய்தார். எனினும், அந்த திருமணங்களை புறக்கணித்து, காதலருடன் குரு கிராம் அருகே வசித்து வந்தார்.
இதை அறிந்த அந்த இளம்பெண்ணின் தந்தை ராஜ்வீர் சிங், 55, மற்றும் சகோதரர் சுனித்குமார், 24, ஆகியோர் அந்த பெண்ணை அழைத்து சென்று, அடித்து கொன்று, ஜாட்வாட் என்ற இடத்தில் தீயிட்டு கொழுத்தி விட்டனர்.
தங்கள் குடும்ப மானத்தை குலைத்து வந்ததால், அந்த பெண்ணை, கடந்த ஞாயிறு அன்று காலையில் கொன்று விட்டதாக, அவர்கள் இருவரும் போலீசில் கூறினர்.
முன்னதாக அந்த பெண்ணை, மே மாதம் 29ம் தேதியே கொன்று, உடலை மறைத்து வைத்து, கடந்த 3ம் தேதி, ஜாட்வாட் அருகே தீயிட்டு எரித்ததாக இருவரும் கூறினர்.
இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.