பெண்களை மணப்பது குழந்தை பெற்றுப்போட மட்டுமே: கம்யூ., தலைவரின் ஆபாச பேச்சால் சர்ச்சை
பெண்களை மணப்பது குழந்தை பெற்றுப்போட மட்டுமே: கம்யூ., தலைவரின் ஆபாச பேச்சால் சர்ச்சை
ADDED : டிச 16, 2025 12:54 AM

மலப்புரம்: கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பின் மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர் ஒருவர் பெண்களை பற்றி ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கேரளாவில் கடந்த 9 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி படுதோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
இந்நிலையில், மலப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் சையத் அலி மஜீத் 47 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையொட்டி நடந்த வெற்றி பேரணியின்போது, பெண் வேட்பாளர்களை முன்னிறுத்திய முஸ்லிம் லீக் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ஓட்டுக்காக ஒரு கட்சி பெண்களை களமிறக்கியது. பெண்களை காண்பித்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்தது. ஆனால் பலிக்கவில்லை.
நம் வீட்டிலும் திருமணமான பெண்கள் இருக்கின்றனர். ஓட்டுக்காக அவர்களை நாம் காட்சி பொருளாக்கவில்லை. அவர்கள் வீட்டிலேயே கவுரவமாக இருக்கட்டும். பெண்களை திருமணம் செய்வது சமையல் செய்யவும் குழந்தைகள் பெற்றுப் போடவும் மட்டுமே.
அதனால் தான் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களின் போது, பெண்ணின் பின்னணி பற்றி தீர விசாரிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
முஸ்லிம் லீக் மட்டுமின்றி, தன் சொந்த கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டில் உள்ள பெண்கள் பற்றியும் சையத் அலி மஜீத் தரக்குறைவாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

