ADDED : நவ 19, 2024 07:47 PM
விக்ரம்நகர்:“காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கையாக வீட்டிலிருந்து வேலை செய்வது, ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனங்கள் இயக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்,” என, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை முதல் தேசிய தலைநகரில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் உள்ளது. காற்றின் தரக்குறியீடு, தொடர்ந்து 450க்கு மேலேயே உள்ளது.
நகரின் காற்று மாசுபாடு குறித்து அவர் கூறியதாவது:
மோசமான காற்று காரணமாக, குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோர் சுவாசிக்க சிரமப்படுகின்றனர். இந்த நிலைக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் முடிவெடுப்போம்.
வாகன இயக்கத்திற்கு உள்ள கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். சூழ்நிலைக்கேற்ப முடிவுகள் எடுக்கப்படும். ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனங்களை இயக்குவது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்.
இது மருத்துவ அவசரகால நேரம். நிலைமையை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

