காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி; மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி; மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
ADDED : அக் 07, 2025 11:10 PM

பாலக்காடு: பாலக்காடு அருகே, காட்டு யானை தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த நிலையில், மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அகளி தேக்குவட்டை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சாந்தகுமார், 52. இவரது மனைவி சுமிதா.
இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, தாவளம் என்ற பகுதியில் இருந்து வீட்டிற்கு சென்றார். அப்போது, மஞ்சகண்டி என்ற இடத்தில் ரோட்டில் நின்று கொண்டிருந்த காட்டு யானை சாந்தகுமாரை தாக்கியது. இதில், சாந்தகுமார் படுகாயமடைந்தார்.
'ஆப்' ஆகாமல் ரோட்டில் பைக் விழுந்து கிடந்ததால், பைக் சப்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பாலக்காடு அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனைக்கு பின், சாந்தகுமாரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், சாந்தகுமாரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி அப்பகுதி மக்கள் தாவளம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மண்ணார்க்காடு டி.எப்.ஒ., அப்துல்லத்தீப் தலைமையிலான வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, இழப்பீடு தொகை 10 லட்சம் ரூபாயில், முதல் தவணையான, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சாந்தகுமார் குடும்பத்திற்கு வழங்கினர். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வனத்துறையில் வேலை வழங்குவதாகவும், வனத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மேலும், இப்பகுதியில் வனவிலங்கு நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்ததால், மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.